தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இது தவறான தகவல். எதையும் முழுமையாக புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமாக எதையும் எழுதாதீர்கள் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் சிரஞ்சீவி கூறியிருப்பதாவது,
“சில தினங்களுக்கு முன்பு, ஒரு புற்றநோய் மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசினேன். தொடர் பரிசோதனைகளின் மூலம் புற்றுநோயை தடுக்கமுடியும் என்றும் மேலும் முன்னெச்சரிக்கையாக நான் ஒரு பெருங்குடல் சோதனையை மேற்கொண்டது குறித்தும், புற்றுநோய் பாதிப்பில்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டேன். நான் பரிசோதனை செய்திருக்காவிட்டால், அது கேன்சராக மாறியிருக்கும் என்று மட்டும்தான் நான் கூறியிருந்தேன்.
ஆனால் சில ஊடக நிறுவனங்கள் நான் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல், எனக்கு கேன்சர் என்றும், சிகிச்சையின் மூலமே உயிர் பிழைத்ததாக நான் கூறியதாக எழுதியுள்ளனர். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய உடல்நலன் குறித்து நலம்விரும்பிகள் பலரும் மெசேஜ் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது அவர்கள் அனைவருக்குமான விளக்கம். அதுபோன்று ஊடகங்களுக்கு என்னுடைய கோரிக்கை என்னவென்றால், விஷயத்தை புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமான எதையும் எழுதாதீர்கள். இதன் காரணமாக பலபேர் கவலையும், பயமும் கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்!
