உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 4) வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இதயத்தில் இருந்து வெளியேறும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால், அறுவைசிகிச்சை முறை இல்லாமல் அவருக்கு ஸ்டன்ட் வைக்கப்பட்டது என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து பிரதமர் மோடி, லதா ரஜினிகாந்த்திடம் நலம் விசாரித்தார். மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் என இந்திய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலக நட்சத்திரங்களும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டனர்.
இந்த நிலையில், இன்று(அக்டோபர் 4) மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த், தன் உடல் நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தான் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ‘இந்தியன் – 3’?
நாம் தமிழர் அவதூறு: எக்ஸ் வலைதள அதிகாரிக்கு நோட்டீஸ்… எஸ்.பி வருண் குமார் வழக்கில் உத்தரவு!
