மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் மயில்சாமிக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நகைச்சுவை நடிகர், பலகுரல் கலைஞர், சமூக ஆர்வலர், அரசியல் பிரமுகர் எனப் பன்முகத்தன்மையோடு அறியப்பட்ட நடிகர் மயில்சாமி நேற்று (பிப்ரவரி 19) அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
திரையுலகையே கண்ணீரில் மூழ்க வைத்த இவருடைய மறைவிற்கு சக நடிகர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அவருடைய இறுதி ஊர்வலம் இன்று (பிப்ரவரி 20) நடைபெறவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மயில்சாமி எனது நெடுங்கால நண்பர். நாங்கள் அடிக்கடி சந்திப்போம்.
அப்போது இரண்டு விஷயங்களைப் பற்றி மட்டும் தான் பேசுவார். ஒன்று எம்ஜிஆர், மற்றொன்று சிவன். நெருங்கிய நண்பர்களாக இருந்த போதும் நாங்கள் இருவரும் சேர்ந்து நிறையப் படங்களில் நடிக்கவில்லை.
விவேக் மற்றும் மயில்சாமி இருவரது இழப்பும் திரைத்துறைக்கு மட்டுமல்ல. சமூகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. இரண்டு பேருமே நல்ல சிந்தனை வாதிகள். சமூக அக்கறை உள்ள மனிதர்கள்.
சிவராத்திரி அன்று மயில்சாமி காலமானது தற்செயலாக நிகழ்ந்தது கிடையாது. ஆண்டவனுடைய கணக்கு. அவருடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் அவர் அழைத்துக் கொண்டார். அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
மயில்சாமியின் வாரிசிற்கு திரைத்துறையில் நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.
கேளம்பாக்கம் சிவன் கோவிலில் நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் என்பதை நான் கேள்விப்பட்டேன்.
அவருடைய கடைசி ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.
மோனிஷா