கிரிமினலுடன் ரஜினி

Published On:

| By Selvam

பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி சிறை சென்ற உத்தரபிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் ரகுராஜ் பிரதாப் சிங்கை ரஜினிகாந்த் இன்று (ஆகஸ்ட் 21) சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு சென்றார். பின்னர் ஜார்கண்ட் சென்ற ரஜினி அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை சந்தித்தார். லக்னோவில் உள்ள திரையரங்கில் துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவுடன் ஜெயிலர் திரைப்படம் பார்த்தார். இதனை தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி வணங்கியது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். நேற்று தனது மனைவி லதாவுடன் அயோத்தி சென்ற ரஜினி அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அயோத்தி கோவிலுக்கு வரவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். இந்தநிலையில்  ஜன்சத்தாதல் லோக்தன்ட்ரிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரகுராஜ் பிரதாப் சிங்கை ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். பல்வேறு கொலை வழக்குகளில் சிறைக்கு சென்ற ரகுராஜ் பிரதாப் சிங்கை ரஜினிகாந்த் சந்தித்தது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரகுராஜ் பிரதாப் சிங்கும் சர்ச்சைகளும்!

ADVERTISEMENT

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 1969-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி உதய் பிரதாப் சிங், மிஞ்சுல் ராஜே தம்பதிகளுக்கு ரகுராஜ் பிரதாப் சிங் மகனாக பிறந்தார். இவர்களது குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள குண்டா தொகுதியில் தற்போது வசித்து வருகிறது.

குண்டா தொகுதியில் அரசியல், அடிதடி என கேங்ஸ்டராக வலம் வரும் ரகுராஜ் பிரதாப் சிங் தனது ஆதரவாளர்களால் ராஜா பையா என்று அழைக்கப்படுகிறார். 1993-ஆம் ஆண்டு முதல் குண்டா தொகுதியில் போட்டியிட்டு வரும் ராஜா பையாவை எதிர்த்து இதுவரை யாரும் வெற்றி பெற முடியவில்லை. இந்த தொகுதியில் அவர் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் ராஜா பையா கொட்டத்தை அடக்க ஆரம்பித்தார். பாஜக எம்எல்ஏ பூரண் சிங் பண்டேலா கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் முலாயம் சிங் ஆட்சிக்கு வந்ததும் இவர் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ராஜா பையா மீதான வழக்கை தடை செய்ய உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு தடை விதித்தது. இதனால் அவர் மீண்டும் சிறை சென்றார். 2004-ஆம் ஆண்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி ராஜா பையா சட்டமன்ற தொகுதியான குண்டாவில் காவல்துறைக்கும் கிராம மக்களுக்குமிடையேயான போராட்டத்தில் டிஎஸ்பி ஜியா உல் ஹக் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பிராதாப்கர் காவல் நிலையத்தில் ராஜா பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி பல கிரிமினல் வழக்குகளில் சிறை சென்ற ராஜா பையாவை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

“காப்பாற்ற யாரும் வரல” : விபத்தில் பலியான சிறுமியின் தாய்!

லூனா 25 தோல்வி: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதில் பாதிப்பா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share