நடிகர் தனுஷின் மகன் யாத்ரா தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இருக்கிறாராம்.
தனுஷ் தற்போது தன்னுடைய 5௦-வது படமான ‘ராயன்’ படத்தினை நடித்து இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தனுஷுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சரவணன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் ஒவ்வொருவரின் போஸ்டரையும் பிளாக் அண்ட் வொய்ட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கதாபாத்திரங்களின் இறந்த காலம் குறித்தும் கதை அமைக்கப்பட்டு இருப்பதால், கலர் போஸ்டர்களை படக்குழு பயன்படுத்தவில்லையாம்.
இதில் அண்ணன், தம்பிகளான தனுஷ், சந்தீப், காளிதாஸ் மூவரும் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகின்றனர். அவர்களின் முன்கதை என்ன? எதனால் இப்படி ஹோட்டல் நடத்தி வருகின்றனர் என்பதை ரத்தம் தெறிக்க, தெறிக்க சொல்வது தான் ‘ராயன்’ படத்தின் கதையாம்.
தனுஷ் இயக்கி, நடிப்பதாலும் முக்கிய நடிகர்கள் பலரும் படத்தில் இணைந்திருப்பதாலும், ‘ராயன்’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் யாத்ராவின் முதல் அறிமுகம் தந்தையின் படத்திலேயே நிகழ்ந்துள்ளது.
இதுவரை படக்குழு யாத்ரா குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் வரை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…