பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதோடு அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனைக்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் உள்ளவையாக உள்ளன.
உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால், பலர் இதைத் தவறாகப் பயன்படுத்தி சர்க்கரைபாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரைபாகு ஆகியவற்றைக் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும் அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் சர்க்கரைப் பாகு, சர்க்கரை ஆகியவற்றில் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், “பனைவெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றில் கலப்படங்களை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு தொடர்பாக மாநில அளவில் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
**-ராஜ்**
.