2022- 2023 நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நோட்டீஸ், ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தியுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் இந்தாண்டு 1,500 கோடி ரூபாய் சொத்துவரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது வரை 1,213 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 287 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி நோட்டீஸ் வழங்குதல், கட்டிடம் சீல் வைத்தல், பொருட்கள் ஜப்தி, வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டுதல் மற்றும் அருகில் பேனர் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
மேலும், “அதிக தொகை பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப்படும். ஏற்கனவே சொத்து வரி செலுத்தாத 499 நிறுவனங்கள் மற்றும் தனிநபர் குறித்த பட்டியல் மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்து வரியினை செலுத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் தபால் துறை ஊழியர்கள், வரி வசூலிப்பாளர்களிடம் காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.
மேலும் இ-சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி இணையதளம், பே.டி.எம்., நம்ம சென்னை ஆகிய செல்போன் செயலிகள் மூலம் பரிமாற்ற கட்டணம் இல்லாமல் செலுத்தலாம்.
‘பாரத் பில் பேமண்ட் சிஸ்டம்’ மூலமாகவும் சொத்து வரியை எளிதாக செலுத்த முடியும். மேலும் தவணை முறை அடிப்படையிலும் சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
தவணை முறை திட்டத்தை எச்.டி.எஃப்.சி. வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது. இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சதவிகிதம் முதல் 8.6 சதவிகிதம் வரைக்கும் இருக்கும்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தவணை முறை திட்டத்துக்கு தகுதியானவர்கள் ஆவர். குறைந்த வட்டி விகிதத்தில் தவணை முறை திட்டத்தை செயல்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ரூ.6 லட்சம் அளவில் கடன் வைத்திருப்பவர்கள் தவணை முறையை பயன்படுத்தி வரி செலுத்த முடியும்” என்றும் தெரிவித்துள்ளனர்.
ராஜ்–
காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்
