கடலூர் மாவட்டத்தில் கனமழையால் மரம் சாய்ந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் நகரப் பகுதிகளில் இன்று (நவம்பர் 23) காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சிதம்பரம் சேத்தியாதோப்பு சாலையில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகிலிருந்த மின்கம்பி மீது விழுந்தது.
அந்த பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதியில் மின்கம்பி விழுந்ததால், அங்கு வசித்து வந்த மரிய சூசை (70), பிலோஸ் மேரி (60), வனதாஸ் மேரி (70) ஆகிய மூன்று முதியவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை காலங்களில் மின்கம்பிகள் மற்றும் மின்சார சாதனங்கள் குறித்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, மின் கம்பம் அருகில் இருக்கும் மரங்களை கிளைகளை வெட்டிவிட்டு பராமரிக்க வேண்டுமென்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
