ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
காகிநாடா மாவட்டம், சமல்கோட்டா பகுதியில் சூர்யா ஸ்ரீ ஃபயர்வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த் ஆலையில் இன்று (பிப்ரவரி 28) 30க்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் அறைகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள் ஆவர்.
வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடம் வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதில் தொடக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான வெடிபொருட்களைச் சேமித்து வைத்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
