ஓடிடி தளங்களில் ஆபாசங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. abuse content Supreme Court order
பத்திரிகையாளரும், முன்னாள் தகவல் ஆணையருமான உதய் மஹுர்கர் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர்.
ஓடிடி தளங்களில் ஆபாச வீடியோக்கள் இருப்பதை சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுக்களில், “முன்னதாக தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்போது பரந்துபட்ட பிரச்சினையாக உள்ளது. சமூக வலைதளம் தொடங்கி ஓடிடி வரை இன்று எல்லா டிஜிட்டல் தளங்களிலும் இந்த வன்முறை ஊடுருவியிருக்கிறது. இது சமூக மதிப்பீடுகள் மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அதோடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான மனநிலையை இளம் வயதினர் மத்தியில் ஊக்குவிக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏஜி மாஷிஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ஓடிடிகளில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சில கன்டெண்டுகள் இடம்பெறுவதாக கூறி சில வீடியோக்களை சமர்ப்பித்தார். மேலும் இது விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு அல்ல என்றும் கூறினார்.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “குழந்தைகள் இதற்கெல்லாம் ஆளாகிறார்கள் என்பதுதான் என் கவலை. சில வழக்கமான நிகழ்ச்சிகளில், பேச்சுகள் கூட மிகவும் வக்கிரமாகஇருக்கிறது. இரண்டு ஆண்கள் கூட ஒன்றாக உட்கார்ந்து அதைப் பார்க்கக்கூட முடியாது. இதுபோன்ற விவகாரங்களில் உள்ள ஒரே அளவுகோல் ’18+ என்பது மட்டுமே” என்று குறிப்பிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள், ஓடிடி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு ஆட்சேபனைக்குரிய, ஆபாசமான மற்றும் ஆபாசமான உள்ளடக்கங்கள் இடம் பெறுவது கவலையை தருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆல்ட்பாலாஜி, முபி, உல்லு டிஜிட்டல் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும், எக்ஸ் கார்ப், கூகுள், மெட்டா இன்க், ஆப்பிள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சமூக வலைதளங்கள், ஓடிடிகளில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். abuse content Supreme Court order