தமிழக மக்கள் ஆயுத பூஜை கொண்டாடி வரும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்தி அச்சிடப்பட்டு இன்று (அக்டோபர் 4) காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்த தோடு, தீபாவளி இனிப்பு வகைகள் குறித்தும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் தான் இனிப்பு வாங்க வேண்டும் என்று அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்தச்சூழலில் 2021 தீபாவளி பண்டிகைக்கு 900 டன் நெய், 400 டன் இனிப்புகள் உட்பட ரூ. 82.4 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்கப்பட்டதாகவும்,
2020 தீபாவளியின் போது, இந்த பொருட்கள், 53 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

இந்த ஆண்டும் ரூ. 200 முதல் ரூ.250 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதற்கான வேலைகளில் ஆவின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
நேற்று அமைச்சர் நாசர் அம்பத்தூர் பால் உபபொருட்கள் பண்ணையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்து அளவு, தரம் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் பொது மக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில் இன்று காலை வினியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில், “ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். ஆவின் இனிப்பை வாங்கி மகிழ்வீர்” என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் எனக் குறிப்பிட்டு, ‘நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா , காஜூ பிஸ்தா ரோல், காஜு கத்தலி, ஆவின் ஸ்பெஷல் மிக்சர் ’ என இனிப்பு கார வகைகளின் பட்டியலும் இடம் பெற்றுள்ளன.
பிரியா
இந்தியாவில் 2025-க்குள் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள்!
