அதிக வட்டி தருவதாகக் கூறும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து மக்கள் ஏமாறவேண்டாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
பல ஆயிரம் கோடி சுருட்டல்
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்ட `ஆருத்ரா கோல்டு’ நிறுவனம், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின் நிறுவனம், வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஎப்எஸ் ஆகிய 3 நிதி நிறுவனங்கள் மீதும் அண்மையில் புகார்கள் குவிந்தன.
குறைந்த முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி அந்த நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து மோசடியில் ஈடுபட்டன.

அதிரடி சோதனை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 93,000 பேர் ரூ.2,125 கோடியும், திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனத்தில் 7000 பேர் ரூ. 5000 கோடியும், சென்னையைச் சேர்ந்த ஐஎப்எஸ் என்ற நிறுவனத்தில் 80,000 பேர் ரூ. 6000 கோடியும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சொத்துக்கள் முடக்கம்
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.85 கோடி முடக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்பின் நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐஎப்எஸ் நிறுவனத்தின் 27 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக 2 பேரும், எல்பின் நிறுவனம் மோசடி தொடர்பாக 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎப்எஸ் நிறுவனத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

பணத்தை மீட்க நடவடிக்கை
வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதோடு, அந்த நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை மீட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைத்து முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கையில் பொருளதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அதிக வட்டி ஆபத்து
மேலும், “ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி வங்கிகள் 5.5 சதவீத வட்டியையும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் 12 சதவீதம் வரை வட்டியையுமே பொதுமக்களுக்கு தரவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் 25 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி நிதிநிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. தமிழக மக்கள் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பிச் செல்லாமல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்யவேண்டும்” என்று பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
கலை.ரா
