பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏ பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக எம்எல்ஏவாக இருப்பவர் ஹர்மீத் பதன் மஜ்ரா. இவர் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ஏமாற்றி தன்னுடன் தொடர்பு வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச படங்களை அனுப்புவது, மிரட்டல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக 45 வயது பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் எம்எல்ஏ ஹர்மீத் பதன் மஜ்ராவை கர்னால் என்ற இடத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது கூட்டாளிகளுடன் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
