“ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என அவரது மனைவியும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். aadhav arjuna wife letter about his politics
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அதிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த 1ஆம் தேதி இணைந்தார். அவருக்கு அக்கட்சியில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” இந்த அறிவிப்பு, எங்கள் குடும்பம் மீது பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் மற்றும் யூகங்களை தவிர்க்குமாறு கோருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து தொழில் முடிவுகளும் சரி, அரசியல் முடிவுகளும் சரி சுயமாக எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாங்கள் இருவரும் தனித்துவமான வேலை வாழ்க்கையுடன், தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள தனியுரிமையையும், கருத்துக்களையும் மதிக்கிறோம்.
எனவே, தவறான கூற்றுகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் பரஸ்பர நலனுக்காக, எங்கள் குடும்பத்தை தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று டெய்சி தெரிவித்துள்ளார்.