இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும்விதமாக, 2022ஆம் ஆண்டில் இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு அமைய வேண்டுமென்ற கனவைத் தான் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று (ஆகஸ்ட் 23) காலை குஜராத் மாநிலத்தில் ஜுஜ்வா என்றிடத்தில் நடைபெற்ற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் தரமானதாக இருப்பதாகவும், இதற்காக ஒரு ரூபாய் கூட லஞ்சம் அளிக்கத் தேவையில்லை எனவும் மக்கள் கருதுவதாகத் தன் பேச்சில் குறிப்பிட்டார் மோடி. “குஜராத் எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் கனவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற பாடத்தையும் தந்துள்ளது. இந்தியா சுதந்திரமடைந்த 75வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, 2022ஆம் ஆண்டில் எந்தவொரு குடும்பமும் இங்கு வீடில்லாமல் இருக்கக் கூடாது” என்று அவர் கூறினார். இந்த விழாவின்போது, காணொலிக் காட்சி மூலம் அம்மாநிலத்திலுள்ள பல்வேறு மக்களுடன் அவர் உரையாடினார்.
“இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைப் பார்த்துவிட்டு, அரசுத் திட்டங்கள் மூலமாகக் கட்டப்படும் வீடுகள் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அரசு இதற்காகப் பணம் அளிக்கிறது. ஆனால், இந்த வீடுகள், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வியர்வையில் கட்டப்படுகின்றன” என்று அவர் குஜராத் மக்களைப் பாராட்டினார். நாங்கள் ஒப்பந்ததாரர்களை நம்புவதில்லை என்றும் அவர் கூறினார்.
“அந்த வீடு எப்படி இருக்க வேண்டும்; எத்தகைய பொருட்களால் கட்டப்பட வேண்டும்; எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்று அந்தக் குடும்பத்தினரே முடிவு செய்கின்றனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே அவர்களுக்கான வீடுகளை உருவாக்கும்போது, அது சிறந்ததாக அமைகிறது” என்று கூறினார் மோடி. இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், குஜராத் மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விழாவுக்குப் பின்னர், ஜூனாகாத் நகரில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்டார். குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மற்றும் குஜராத் ராஜ்பவனில் சோம்நாத் கோயில் அறக்கட்டளை சந்திப்பு ஆகியவற்றில் அவர் பங்கேற்கவுள்ளார்.
�,