தனக்கு பிடிக்காத தாடியை ஷேவ் செய்ய கணவர் மறுத்ததால், அவரது தம்பியுடன் ஒரு பெண் ஓடியதாக கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. a wife elope with brother in law bcoz of beard?
உத்தரபிரதேசம் மீரட்டை சேர்ந்தவர்கள் முகமது சாஹிர் மற்றும் அர்ஷி தம்பதியர். இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
அதன்பின்னர் சில நாட்களுக்கு பிறகு தனது கணவரின் தாடி பிடிக்காததால் அதை ஷேவ் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார் அர்ஷி.
ஆனால் தாடி மீது கொண்ட பிரியம் காரணமாக அதை ஷேவ் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார் சாஹிர்.

இது நாளடைவில் இருவருக்கும் இடையே தகராறாக மாறியது. இதற்கிடையே, தாடியை க்ளீன் ஷேவ் செய்த கணவரின் தம்பியும், மைத்துனருமான சபீருடன் அர்ஷிக்கு நெருக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தனது கணவரை விட்டுவிட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி சபீருடன் அர்ஷி ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது.
தனது மனைவி எப்படியாவது திரும்ப வந்துவிடுவாள் என கடந்த மூன்று மாதங்களாக தேடி வந்தார் சாஹிர். ஆனால், எந்த துப்பும் கிடைக்காததால் அவர் மீரட்டில் உள்ள லிசாடி கேட் காவல் நிலையத்தில் தனது மனைவி காணாமல் போனதாக புகார் அளித்தார்.
அதில், “அர்ஷிக்கு என் தாடி பிடிக்கவில்லை. அவள் குடும்ப அழுத்தத்தின் பேரில் தான் என்னை திருமணம் செய்தாள். அதன்பின்னர் அவள் என் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். அவர்கள் இருவரும் செல்போனில் பேசிய ஆடியோ பதிவுகள் என்னிடம் உள்ளது. அதில் எனக்கு உணவில் விஷம் வைக்கவும், கூலிப்படை மூலம் என்ன கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டது பதிவாகியுள்ளது” என சாஹிர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை, காதலர் சபீருடன் அர்ஷி தனது தாய் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சாஹிருடன் இனி வாழ விரும்பவில்லை என்றும், சபீரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நான் கணவரை விட்டு ஓடியதற்கு தாடி காரணமில்லை என்றும், சாஹிர் இல்வாழ்க்கைக்கு தகுதியற்றவர் என்றும் அவள் குற்றம் சாட்டினார்.
குற்றச்சாட்டுகளால் மனமுடைந்த சாஹிர், போலீசார் முன்னிலையில் அர்ஷியை விவாகரத்து செய்ய முன்வந்தார்.
இதனையடுத்து அப்போது கண்டிஷனை முன்வைத்தார் அர்ஷி. அவர், ”சாஹிர் எங்களிடம் வரதட்சணையாக பெற்ற ரூ.5 லட்சத்தை திருப்பித் தர வேண்டும். அப்போது தான் நான் விவாகரத்திற்கு சம்மதிப்பேன். இல்லையென்றால் விவாகரத்து செய்யமால் நான் என் மைத்துனருடன் வாழ்வேன்” எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
ஆனால் 2.5 லட்சம் மட்டுமே கொடுப்பேன் என சாஹிர் சம்மதம் தெரிவித்ததால், விவாகரத்து கேள்விக்குறியானது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீரட் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆயுஷ் விக்ரம், “இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.