காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் யாரும் ஆஜராகவில்லை.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு உயர் மட்ட குழு விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து நேற்று(ஏப்ரல் 9) திருநெல்வேலி சென்ற அவர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ள சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இருவரிடமும் இதுவரை நடந்த விசாரணை குறித்த தகவல் கோப்புகளை பெற்றுக்கொண்டார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 10 )காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வந்து புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முதல் நாள் விசாரணையை அமுதா ஐஏஎஸ் தொடங்கினார். இதனை அடுத்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இருந்து உதவி காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி மற்றும் நிலைய எழுத்தர் வின்சென்ட் இருவரும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் .
முன்னதாக உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வருவாய்த் துறையினர் கட்டுப்பாட்டில் வந்தது.காவலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார் அமுதா ஐஏஎஸ்.
மு.வா.ஜெகதீஸ் குமார்

Comments are closed.