ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா கூறியதை அவரது மகனும் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா மறுத்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் மிக முக்கிய கட்சிகளுள் ஒன்றாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15) மதியம் செய்தியாளர்களை சந்தித்த ஃபரூக் அப்துல்லா, “இந்தியா கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேசிய மாநாட்டு கட்சி தனது சொந்த பலத்தில் தனித்துப் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்தியா கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் இந்த பேச்சு கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஃபரூக்கின் பேச்சிற்கு அவரது மகனும் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார்.
"JKNC was a part of the INDIA Alliance and continues to be a part of the INDIA Alliance." JKNC VP @OmarAbdullah dispels the media-created fake narrative that JKNC has left the alliance.pic.twitter.com/aX9JJGm5ge
— JKNC (@JKNC_) February 15, 2024
இதுதொடர்பாக தனது தந்தையுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தேசிய மாநாடு கட்சி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. நாங்கள் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தோம், இன்னும் இருக்கிறோம்.
மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மட்டுமே இப்போதுள்ள முக்கிய குறிக்கோள். நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நாம் வேறுபாடுகளை மறந்துவிட வேண்டியது முக்கியம். ஒற்றை இலக்கை நோக்கிய பயணத்தில் இரண்டு படகுகளில் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இனி இந்த கூட்டணி குறித்து எந்த கேள்வியும் இருக்கக்கூடாது.” என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காஷ்மீரில் தனித்து போட்டி : இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவு!