பூம்புகாரில் நடந்த வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர்- தலைவர் ராமதாஸ், “தந்தையை மிஞ்சும் தனயன் இருக்க கூடாது” என அன்புமணியை சாடினார்.
மயிலாடுதுறை பூம்புகாரில் வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய மருத்துவர் ராமதாஸ்,
போதை பொருள் தடுப்பு
போதைப்பொருள்களை தடுப்பதில் தமிழக மக்களும் முனைப்புடன் உள்ளனர். தமிழ்நாட்டில் கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும். என்னுடன் 10 அதிகாரிகளை அனுப்புங்கள். நான் சொல்வதை அவர்கள் கேட்டு உங்களிடம் சொல்ல மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்து இந்த 2 தீமைகளை நிச்சயமாக ஒழிப்போம்.
என்னுடைய நண்பர் கலைஞர் 20% ஒதுக்கீடு அளித்தார். தற்போது, அண்டை மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் இன்னும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?
10.5% உள் ஒதுக்கீடு
உடனடியாக 10.5% உள் ஒதுக்கீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாட்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு என்ன ஆகும். அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
மோடி பேச்சை மேற்கோள் காட்டிய ராமதாஸ்
ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி பேசுகையில், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்றார். அதற்கு உதாரணம் பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழ புரத்திலே இருக்க கூடிய கோயிலும் என்றார். இது அருமையான வார்த்தை.
வரும் 2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். நான் சொல்வதுதான் நடக்கும். யார் என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்காதீர்கள் என்றார்.
