திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர் முன் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
திருப்பதி கோவில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் லட்டு தயாரிக்கப்படும் நெய்யின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
பரிசோதனையில், நெய்யில், மாட்டு கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது தெரியவந்தது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையைத் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது.
அதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. நெய்யில் சோயா பீன்ஸ் எண்ணெய், மீன் எண்ணெய் மாட்டு கொழுப்பு போன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், திண்டுக்கல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் செப்டம்பர் 21ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், அனைத்து விதமான தரப் பரிசோதனையிலும் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், திருப்பதி தேவஸ்தானம் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், 10 பிரிவுகளின் கீழ் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான், ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர் திருப்பதி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இந்தியாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த ஹீரோவுக்கு தாதா பால்கே விருது!