அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஜுன்14ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன் தினம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 18) சென்னை நொச்சிக்குப்பத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், “செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். அவரது கல்லீரலில் கல் இருப்பதாக முதலில் சொன்னார்கள். அதற்காக சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கல் இல்லை, சிறு சிறு கொழுப்பு கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
அவர் சோர்வு நிலையில் இருக்கிறார். இதனால் இன்று கூட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
செந்தில் பாலாஜி எத்தனை நாள் சிகிச்சையில் இருப்பார் என மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே இன்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாலும் தமிழக அரசில் அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், பதவி நீக்கம் செய்த உத்தரவை ஜூன் 29, 2023 அன்று ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“இந்த விவகாரத்தில், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றாலும், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. அதோடு இந்த வழக்கையும் முடித்துவைத்து உத்தரவிட்டது” என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ChatGPT நிறுவனத்தின் சி.ஈ.ஓ அதிரடி நீக்கம்… இணை நிறுவனர் ராஜினாமா… பின்னணி என்ன?