மதுரை தவெக மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21ந் தேதி நடைபெற்றது.
வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகரை சேர்ந்த மதன் நண்பர்களுடன் விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்றிருந்தார். மாநாடு முடிந்தவுடன் அங்கிருந்து காரில் வந்தவர்கள் திருச்சி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட இறங்கினர். மீண்டும் காரில் ஏறிய போது மதன் மட்டும் காணாமல் போயிருந்தார். அவரை தேடிய போது மதன் கிடைக்காததால் அவருடன் சென்றிருந்தவர்கள் அங்கிருந்து கிளம்பி வேலூருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
மதன் மொபைலுக்கு போன் செய்த போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மதனுடன் சென்றவர்கள் அவர் காணாமல் போனது குறித்த தகவலை குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மேலும் மதனை காணவில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே திருச்சி அரவக்குறிச்சி பகுதியில் கடந்த 22ம் தேதி சாலை விபத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இது மதன் உடலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மதனின் உறவினர் உயிரழந்த நிலையில் மீட்கப்பட்டது மதனின் உடல்தான் என்பதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து மதன் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் தற்போது மதன் உடல் வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விஜய் மாநாட்டிற்கு சென்ற இளைஞர் சடலமாக கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
