கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணவு தேடி வரும் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகள் விவசாய விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி செல்கின்றன..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிபுரம் பகுதியில் அதிகாலை நுழைந்த ஒற்றைக் கொம்பன் காட்டு அப்பகுதி மக்களை அலறி அடித்து ஓடச் செய்தது.
இந்நிலையில் ஆலாந்துறை அடுத்த இருட்டு பள்ளம் கிராமத்திற்குள் நேற்று இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இந்த ஒற்றைக் கொம்பன் காட்டு யானை அங்கு இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தி விட்டு அதிகாலை நொய்யல் ஆற்றுக்குள் இறங்கி வனப் பகுதிக்குள் சென்றது. அதனை அப்பகுதியில் சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர். அதில் , “ராஜாவே காலையில 6 மணிக்கே வந்துட்டயே.. போ தம்பி.. போ தம்பி” என யானையை வனத்திற்கு அனுப்ப முயற்சிக்கின்றனர். அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் 3 பேரை தாக்கி கொன்ற ஒற்றைக் காட்டு யானை ரோலக்ஸ் வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் சில நாட்களாக ஆலாந்துறை, இருட்டு பள்ளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது ஒற்றைக் கொம்பனும் மற்றும் தடாகம், வரப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் வேட்டையனும் கடந்த சில மாதங்களுக்கு பிறகு ஊருக்குள் வரத் துவங்கி உள்ளது.
அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
