கோவையில் KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தனியார் கல்லூரியில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் மாணவியை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் KG தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஹர்ஷவர்தன். இவர் தன் உடன் படித்து வந்த மாணவியை கடந்த 3 மாதங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், இன்று கல்லூரி வளாகத்தில் வைத்து அவளை கத்தியால் குத்தியுள்ளான். இதைத் தொடர்ந்து, கத்தியால் குத்திய மாணவன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானான்.இதில் மாணவியின் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த மாணவி மீட்கப்பட்டு, அந்த தனியார் கல்லூரி குழுமம் நடத்தி வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி வளாகத்தில் சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
