தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மழை இல்லை; குறைவாகவே பதிவானது. அதே நேரத்தில் டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவியது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்தியப் பெருங்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், காவிரி படுகை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
