மதுரையில் தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதைக்கு வடிவம் கொடுத்து சிவாஜிக்காக கதை – வசனம் எழுதி முடிக்கிறார், கதாசிரியர் வசனகர்த்தா எம்.எஸ்.சோலைமலை. சிவாஜியின் கேரக்டரும் கெட்டப்பும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
மாமல்லபுரத்துக்கு குடும்பத்தோடு போய் , தனது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார் சோலைமலை.
அப்போது, ஒரு சிறுவன் ஒரு கை ஊனமாகவும் இரண்டு கால்கள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு தவழ்ந்து வந்து இவர்களிடம் பணம் கேட்கிறான் .
சோலைமலையின் மனைவி, “, ஏதாச்சும் இருந்தா கொடுத்து அனுப்புங்க’ என்று சொல்ல, சோலைமலை பத்து ரூபாயைக் கொடுக்கிறார்.
1958 இல் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை. ஒரு பவுன் தங்கமே அறுபது எழுபது ரூபாய் தான்.
உடனே அவரது மனைவி, ” எதுக்கு 10 ரூபாயை போடுறீங்க?” என்று கேட்க, “, இந்தப் பத்து ரூபாய் எத்தனையோ பேருக்கு லட்சங்கள் சம்பாதிச்சுக் கொடுக்கப்போகுது’ என்கிறார் சோலைமலை.
சிவாஜிக்கான கதாபாத்திரம் அங்கே அந்த ஏழைச் சிறுவனால் மாமல்லபுரத்தில் உருவானது.
படத்துக்கான முழுக்கதையையும், வசனத்தையும், கதாபாத்திரங்களின் பெயர்களோடு ராயப்பேட்டை அஜந்தா பஸ் ஸ்டாப்புக்கு அருகில் இருந்த சந்திரா லாட்ஜில் ரூம் எடுத்து எழுதி முடித்து கதை சொல்வதற்காக சோலைமலையும் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியும் சிவாஜி வீட்டிற்குச் செல்கிறார்கள்.
வீட்டில் சிவாஜியோடு, எம்.ஆர். சந்தானம் (சந்தானபாரதியின் தந்தை) மோகன் ஆர்ட்ஸ் மோகன், தயாரிப்பாளர் பெரியண்ணா, இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சில நண்பர்கள், இவர்களோடு பைனான்ஸியர்களும் கதை கேட்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள்.
கதையைக் கேட்டவுடன், ஏ.பி.நாகராஜன் மட்டும் இக்கதையைப் படமாக எடுக்கலாம், நிச்சயமாக வெற்றி பெறும் என்று சொல்கிறார். மற்றவர்கள் வேண்டாம் என்கிறார்கள்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சிவாஜி எழுந்து உள்ளே செல்கிறார். பதினைந்து நிமிடங்கள் கழித்து, இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு, அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டு கதாபாத்திரமாகவே மாறி வந்து நிற்கிறார்.
இதைப் பார்த்தவுடன் சோலைமலை கண்களில் ஆனந்தக் கண்ணீர், சிவாஜியைக் கட்டித் தழுவி “என்னுடைய கன்னையாவை (படத்தில் சிவாஜியின் பெயர்) இங்கேயே பார்த்துட்டேன், இனிமே படம் எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன’ என்று சொல்ல, உடனே சிவாஜி “இக்கதையை படமா எடுக்குறோம்’ என்று சொல்லி சோலை மலையைக் கட்டி தழுவினார்.
படத்தின் பெயர் …
பாடல் சொன்னால் போதும் . படத்தின் பெயர் தெரியும்.
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ ?
— ராஜ திருமகன்
