aநீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம்!

Published On:

| By Balaji

நீட் தேர்வுக்கு எதிராக வரும் 5ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் தமிழகத்துக்குக் கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படும் என்று கூறினர். ஆனாலும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.

நீட் தேர்விலிருந்து ஒரு வருடமாவது விலக்கு வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முடியாததால் ஏற்பட்ட பாதிப்பினால் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 6ஆம் தேதி இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு இயக்கங்கள் போராடிவரும் நிலையில், ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமையில் ஜனவரி 27ஆம் தேதி அன்று பெரியார் திடலில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1) திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்றும் நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில், இறுதி நேரத்தில் அரசியல் கட்சிகள் போராடுவது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே என்று விமர்சனம் எழுந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share