ஆளுநர் 2ஆவது நாளாக ஆய்வு!

Published On:

| By Balaji

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2ஆவது நாளாக இன்று (நவம்பர் 22) ஆய்வு செய்துவருகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்று முதல் ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார். நேற்று நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் வரை காரில் சென்று, பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம், பழங்கள்ளிமேடு, தோப்புத்துறை, வேதாரண்யம், மகாராஜபுரம் உள்ளிட்ட 9 இடங்களைப் பார்வையிட்டு, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களிடம் சேத விவரம் குறித்துக் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

2ஆவது நாளான இன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்து வருகிறார். தட்டாங்கோயில் அருகேயும் அவர் இன்று ஆய்வு செய்தார். தங்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர வேண்டும், மின்சாரம், குடிநீர் ஆகியவை இல்லை என ஆளுநரிடம் மக்கள் தெரிவித்தனர். சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அவர், உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் மக்களிடம் கூறினார்.

தட்டாங்கோயிலில் ஆளுநர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, பெண் ஒருவர் தனது வீடு முழுவதுமாக இடிந்துவிட்டதாகக் கூறினார். அவரிடம், ரூ.18.500 இழப்பீடு வழங்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் உள்ள முகாமிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திருத்துறைப்பூண்டியில் ஆய்வை முடித்துக்கொண்ட பின்னர், முத்துப்பேட்டை பகுதியில் அவர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share