அழிவின் விளிம்பில் ஆண் கடல் ஆமைகள்!

Published On:

| By Balaji

உயரும் வெப்பநிலையால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஆண் பெருந்தலைக் கடலாமைகள் இனி குஞ்சு பொறிக்காது என்று ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவு கூறியுள்ளது.

பெருந்தலைக் கடலாமை *(Loggerhead Sea Turtle)* என்பது கடலாமை வகைகளுள் ஒன்றாகும். 35 அங்குலம் அதாவது 90 செ.மீ வரை வளரக்கூடிய இதன் எடை 135 கிலோ ஆகும். இது பெரும்பாலும் மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓடுகளைக்கொண்ட இரண்டாவது ஆமை இனம் இதுவே. இவற்றின் ஆயுட்காலம் 47 முதல் 67 ஆண்டுகள் வரையாகும். இவை அதிகமாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும்.

ADVERTISEMENT

2009ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்ட சிவப்பு பட்டியலில்*(Red list)* இந்தக் கடலாமையும் இடம் பெற்றது. சிவப்பு பட்டியல் என்றால் என்ன? ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும்.

காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன இந்தக் கடலாமைகள். ஆமை குஞ்சுகளின் பாலினம் ஆணா பெண்ணா என்பது அடைகாக்கும் வெப்பநிலையால் தான் தீர்மானிக்கப்படுகிறது. வேட்டையாடுதல், கடலோரத்தில் சுற்றுலா மூலம் பெருகும் வீடுகள், ஹோட்டல்கள், மின்விளக்குகள் காரணமாக பெரும்பொலானவை குஞ்சுகளாக இருக்கும்போதே திசை தப்பிவிடுகின்றன அல்லது மடிகின்றன. மேலும் கடலுக்குள் அதிகரித்துள்ள வெப்பம், மாசு போன்ற காரணங்களும், நவீன மீன்பிடித் தொழில்முறையும் இதன் அழிவுக்கு காரணமாகின்றன.

ADVERTISEMENT

மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான கேப் வெர்டே உலகின் மிகப் பெரிய பெருந்தலைக் கடலாமைகளின் கூடுகளில் ஒன்றாகும். 2100 ஆம் ஆண்டு வாக்கில் கேப் வெர்டே தீவுகளில் 90% க்கும் மேற்பட்ட பெருந்தலைக் கடலாமைகள் ஆபத்தான உயர் வெப்பநிலையில் மட்டுமே அடைகாக்கும் நிலை ஏற்படும். மேலும் ஆமைகள் குஞ்சு பொரிப்பதற்கு முன்பே கால நிலை மாற்றத்தால் இறக்கும் என்று எக்ஸிடெர் பல்கலைக்கழக ஆய்வு எச்சரித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி 2100 வாக்கில் 0.14% குஞ்சுகள் மட்டுமே ஆண்களாக இருக்கும். சூழல் சீர்கேடு நிலை அதிகமாகும் பட்சத்தில் ஆண் கடலாமைள் பிறப்பது முற்றிலும் நிறுத்தப்படலாம் என அதிர்ச்சியளிக்கிறது இந்த ஆய்வு.

எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் லூசி ஹாக்ஸ் இதனைப் பற்றி சயின்ஸ் டெய்லி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘தற்போதைய குஞ்சுகளில் 84% பெண்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம், மேலும் வெப்பமான காலநிலை இந்த விகிதத்தை அதிகரிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஆய்வில் உள்ள கணிப்புகள் தற்போதைய கூடுகள் நடத்தையை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பெருந்தலைக் கடலாமைகள் குளிர்ச்சியாக இருக்கும் ஆண்டின் தொடக்கத்தில் கூடு கட்டுவதன் மூலம் இந்த விகிதத்தை ஓரளவிற்கு மாற்றியமைக்கலாம். இயற்கையும் இதைச் செய்யும் ஆமைகளுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் ஹாக்ஸ் மேலும் கூறியுள்ளார்.

கேப் வெர்டேயில் உள்ள 85 சதவிகித்துக்கும் மேலுள்ள பெருந்தலைக் கடலாமைகளின் கூடுகள் தற்போது போவா விஸ்டாவில் வைக்கப்பட்டுள்ளன. ‘அங்கு அடைகாக்கும் வெப்பநிலை மிகச்சிறந்ததாக இருக்கிறது. எனவே புதிய ஆண் கடலாமைகள் பிறப்பது நின்ற பிறகும் வயதான ஆண் கடலாமைகள் பல ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்யலாம்’ எனக் கூறியுள்ளார் லூசி ஹாக்ஸ்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share