நாளை (மார்ச் 9) சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் தொடங்கும் நிலையில், சிஏஏ விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் இரவு-பகல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் மார்ச் 2ஆம் தேதி அவசர அவசரமாக டெல்லி சென்று வந்தனர்.
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ’”அமைச்சர்கள் இருவரும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ராஜ்யசபா சீட் தொடர்பாகவும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும் பட்சத்தில் அது தேர்தலில் திமுகவுக்கே சாதகமாக முடியும் என்றும், அதனால் சட்டமன்றத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்திருப்பதாகவும் எடப்பாடியின் தகவலை அமைச்சர்கள் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அமித் ஷா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களை அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
.டெல்லியிலிருந்து திரும்பிய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துவிட்டார்கள். இதற்கிடையே, வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு, கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு உள்ளிட்ட இஸ்லாமிய பிரதிநிதிகளையும் அழைத்து முதல்வர் பேசியிருக்கிறார். அவர்களிடம், ‘உங்களுக்கு எதிராக எதுவும் நடக்காது. நம்பிக்கையா இருங்க’என்றும் சொல்லியனுப்பியிருக்கிறார். என்ன முடிவெடுப்பாரோ?” என்றனர்.
தமிழக சட்டமன்றத்தின் மானியக் கூட்டத் தொடர் நாளை (மார்ச் 9) துவங்கவுள்ள நிலையில், சிஏஏ விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று பல்வேறு தரப்பினரிடமும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது கூட்டத் தொடரின்போதுதான் தெரியவரும்
**-எழில்**�,