கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் காணாமல் போன சோழர் கால ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1956 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள வீரசோழபுரம் பகுதியில் நாரிஸ்வரன் என்ற சிவன் கோயிலில் இருந்து ஆறு உலோக சிலைகள் திருடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த ராஜேந்திர சோழனின் ஒன்பது வெண்கல சிலைகளை இந்தோ பிரெஞ்ச் நிறுவனம் ஆவணப்படுத்தியதை அறிந்து கொண்டனர்.

அது தொடர்பாக விவரங்களை கடிதம் மூலம் அனுப்பி ஆவணங்களை ஆய்வு செய்தபோது சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி அளித்துள்ளது.
குறிப்பாக நடராஜர் சிலை, திரிபுராந்தக சிலை திரிபுரசுந்தரி சிலை, வீணா தாரா தட்சிணாமூர்த்தி சிலை, சுந்தரர் மற்றும் அவரது மனைவி பறவை நாச்சியார் சிலை ஆகிய புகைப்படங்களை அளித்தது.
இதனை அடிப்படையாக வைத்து சிலை ஆர்வலர்கள், சிலை சேகரிப்பாளர்கள் ஆகியோரிடமும் குறிப்பாக விஜயகுமார் என்ற சிலை ஆர்வலர் உடன் சேர்ந்து இணையதளத்தில் தேடுதலில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பிரீர் சேக்லர் மியூசிக் ஆப் ஆர்ட் என்ற அருங்காட்சியத்தின் இணையதளத்தில் ஆய்வு செய்த போது, இரண்டாம் உலகப் போர் ஆவண ஆதாரங்களை வைத்து,
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி சுந்தரர் மற்றும் மனைவி பரவை நாச்சியார் சிலை அருங்காட்சியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டுபிடித்தனர்.
இந்த சிலைகள் வீரசோழபுரம் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

இதேபோன்று ஆய்வு மேற்கொண்டதில் கிறிஸ்டின் ஏல நிறுவனத்தில் கடந்த 23ஆம் ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய நடராஜர் சிலையும்,
கடந்த 2013 ஆம் ஆண்டு பத்தாம் மற்றும் பதினோராம் நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த சுமார் நான்கு லட்சம் முதல் 6 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய வீனாதாரா தட்சிணாமூர்த்தி சிலையும் ஏலத்தில் வாங்கப்பட்டதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதேபோன்று அமெரிக்காவில் ஓஹீயோ என்ற இடத்தில் க்ளீவ்லாண்ட் மியுசியம் ஆஃப் ஆர்ட்டில் திரிபுராந்தகம் சிலை மற்றும் திரிபுரசுந்தரி சிலை ஆகியவை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆறு சிலைகளின் புகைப்படத்தை கும்பகோணம் நீதிமன்ற கூடுதல் தலைமை நடுவர் மூலம், சென்னையில் உள்ள தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வுக்காகவும் அனுப்பப்பட்டது.
ஆய்வு மேற்கொண்டதில் வீரசோழபுரம் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்பது உறுதியானது.
அதனை எடுத்து இந்திய அமெரிக்க பரஸ்பர குற்றவியல் பரஸ்பர சட்ட உதவி அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மத்திய அரசின் மூலம் அமெரிக்க அரசிற்கு 6 சிலைகளையும் மீட்பதற்கான கடிதத்தை அனுப்பி உள்ளது.
கலை.ரா
