8-வது சம்பள கமிஷனுக்கான அறிவிப்பு வெளியாகி ஊழியர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், மத்திய அரசு தற்போது அளித்துள்ள ஒரு விளக்கம் அரசு ஊழியர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
“அகவிலைப்படியை (DA) அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என்ற கேள்விக்கு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் “இல்லை” என்று கைவிரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (திங்கள்) தொடங்கியது. இதில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
அதில், “தற்போதைய நிலையில், அகவிலைப்படியை(Dearness Allowance) அடிப்படை சம்பளத்துடன்(Basic Pay) இணைக்கும் எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஊழியர்களின் கோரிக்கை என்ன? வழக்கமாக அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தைத் தாண்டும்போது, அதை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது ஊழியர் சங்கங்களின் நீண்ட கால கோரிக்கை.
- தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளது.
- இதை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயரும். அதற்கேற்ப வீட்டு வாடகைப்படி (HRA) உள்ளிட்ட இதர சலுகைகளும் கணிசமாக உயரும்.
- ஆனால், 8-வது சம்பள கமிஷன் 2026-ல் தான் அமலுக்கு வரும் என்பதால், அதற்கு முன்பே இந்த இணைப்பை ஊழியர்கள் எதிர்பார்த்தனர். அரசின் தற்போதைய பதில் அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.
அரசு சொல்லும் காரணம்: “விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைச் சமாளிக்கவே அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டும் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படுகிறது. எனவே இதை இணைக்கும் உத்தேசம் இல்லை,” என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
8-வது சம்பள கமிஷன் அப்டேட்: இதற்கிடையில், 8-வது சம்பள கமிஷனின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு அடுத்த 18 மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதன்பிறகு, ஜனவரி 1, 2026 முதல் புதிய சம்பள விகிதம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை பெரிய சம்பள உயர்வுக்கான வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.
