கலயங்களை உடைத்த காவல்துறை-தேர்தல் பிரச்சினை ஆகுமா கள்?

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஆளும் அதிமுகவும், ஆண்ட திமுகவும் தங்கள் முழு இலக்கு பூரண மதுவிலக்கு என்று பெயருக்கு சொன்னாலும், மதுபான விற்பனையை மையமாக வைத்தே ஆட்சிச் சக்கரம் சுழன்று வருகிறது. ஆனால் பனை, தென்னை கள் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்திருக்கிறது.

இதற்கிடையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கள் என்பது போதைப் பொருள் அல்ல. அது உணவுப் பொருள் என்று சொல்லி கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, ‘கள்’ இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சில தொழிலாளர்களை, காவல்துறையினர் கைது செய்தனர். ஆனாலும், வரும் பிப்ரவரி 27ல், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், பொன்னம்பலத்தில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடக்கும் எனத் தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில்தான் நேற்று (பிப்ரவரி 14) அந்தப் பகுதியில் காவல்துறையினர், குருவிக்காரர்களை அழைத்துச் சென்று வில்லுண்டையினால், பனைமரத்தில் கட்டியிருந்த கள் பானைகளை உடைத்து, பாளைகளை சேதப்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி கூறியுள்ளார்.

மேலும் அவர், “ கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இதன் அடிப்படையில் கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருளா? என்று கள் இயக்கம் விடுத்திருக்கும் சவாலை ஏற்றுக் கொண்டு, வாதிட்டு வெற்றி பெறுவதை விட்டுவிட்டு, போராளிகள் மேல் காவல்துறையைவிட்டு அடக்குமுறையை மேற்கொள்வது, சர்வாதிகாரப் போக்காகும். இது ஜனநாயகத்திற்கு அடிக்கும் சாவு மணியே ஆகும்.

இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை, காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். ஒவ்வொரு பனைத் தொழிலாளியின் கடும் உழைப்பை எண்ணிப்பார்க்காமல், பாளைகளையும், பானைகளையும் சேதப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல். மதுவிலக்கு சட்டப்படி இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் மதுவிலக்குச் சட்டம். இவ்வாறான அரசின் போக்கு, விவசாயிகள் மற்றும் பனைத் தொழிலாளர்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. வரும் 2021 தேர்தலில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகக் “கள்” உருவெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share