77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல் துறை அதிகாரிகள்/பணியாளர்களுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு “தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்” வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா பத்து கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
