75 வயது நிறைவடைந்தவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என தாம் முன்னர் பேசியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜகவின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.. இதன் தலைவரான மோகன் பகவத், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, 75 வயதாகிவிட்டாலே பதவிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கூறியிருந்தார்.
மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிறது என்பதால் இந்த கருத்து விவாதப் பொருளானது. பாஜகவில் 75 வயதுக்கு மேல் எந்த ஒரு பதவியிலும் யாரையும் அனுமதிப்பது இல்லை; பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானியே இந்த காரணத்தை முன்வைத்தே ஓரம்கட்டப்பட்டார். இதனால் அடுத்த மாதம் 75 வயதை எட்டும் பிரதமர் மோடியும் பதவி விலகுவாரா? என்ற விவாதம் களைகட்டியது.
இந்த பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் 75 வயது விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார் மோகன் பகவத்.
இது தொடர்பாக மோகன் பகவத் கூறுகையில், ” தாம் ஒரு போதும் 75 வயதாகிவிட்டால் பதவியில் ஓய்வு பெற வேண்டும் என சொல்லவே இல்லை; யாரையும் குறிப்பிட்டும் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 80 வயதான நபரை ஷாகா நடத்த சொன்னால் நடத்தத்தான் வேண்டும்; ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் வயது, ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை; ஆகையால் தாமும் அப்படி பேசவே இல்லை” என்றார்.
