71வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 71வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அழகி போட்டி நடைபெறும் இறுதி தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடைபெற்றது. பெங்களூருவில் நடந்த இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரீன் ஸ்கிலிவா உலக அழகி பட்டத்தை வென்றார்.
அதன்பிறகு சுமார் 27 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறாமல் இருந்த உலக அழகி போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
இது குறித்து ‘மிஸ் வேர்ல்ட்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜூலியா மோர்லி நேற்று (ஜூன் 8) டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,

“71வது மிஸ் வேர்ல்ட் இறுதிப்போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த தேசிய சாம்பியன்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மிகவும் கண்கவர் உலக அழகி இறுதிப்போட்டியை நாங்கள் வழங்க உள்ளோம்” என்று பேசினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கரோலினா பைலாவ்ஸ்கா (மிஸ் வேல்ர்ட் 2022), சினி ஷெட்டி (மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா இந்த போட்டி குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தியா வந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக அழகி போட்டி குறித்து அவர், “இந்த அழகான நாட்டில் எனது கிரீடத்தை ஒப்படைக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.
உலகிலேயே மிகப்பெரிய விருந்தோம்பல் கொண்ட நாடு இந்தியா. இங்கு இரண்டாவது முறையாக வந்துள்ள எனக்கு சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
மதிப்பிற்குரிய குடும்பம், மரியாதை, அன்பு, இரக்கம் ஆகியவற்றை நாங்கள் உலகுக்குக் காட்ட விரும்புகிறோம். இங்கே பார்ப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
உலகம் முழுவதையும் ஒரு மாதத்திற்கு இங்கு கொண்டு வந்து, இந்தியா வழங்கும் அனைத்தையும் காண்பிப்பது சிறந்த யோசனையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு ‘மிஸ் இந்தியா வேர்ல்ட்’ சினி ஷெட்டி, இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள உற்சாகமாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
“உலகமெங்கும் இருந்து வருகிற எனது எல்லா சகோதரிகளையும் நான் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு இந்தியா என்றால் என்ன என்பதை காண்பிப்பதற்கும் காத்திருக்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை என்ன என்பதையெல்லாம் அவர்களுக்கு காட்டுவேன்.
இந்தப் பயணத்தில் நானும் இருக்கிறேன் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 70 முறை நடந்துள்ள உலக அழகி போட்டியில் இந்தியா 6 முறை பட்டம் வென்றுள்ளது. ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மனுஷி சில்லர் (2017) ஆகியோர் வரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை 7வது முறையாக இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுவது, மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மோனிஷா
