புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்த கண்ணாடி பாட்டிலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்தவர் 45 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், தனது ஆசனவாயில் இருந்து ரத்தம் வருவதாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்து எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றுக்குள் மலக்குடலில் 7அப் கண்ணாடி பாட்டில் இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன் ஆலோசனையின்படி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிர்மலா தேவி தலைமையில், மருத்துவர்கள் குழு மாற்றுத்திறனாளியை முழு பரிசோதனை செய்து அவரது வயிற்றில் இருக்கும் பாட்டிலை எப்படி அகற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தனர்.
தொடர்ந்து அவரது உடலில் வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். பின்னர் அவரது வயிற்றில் இருந்த 21 செ.மீ உயரம், 10 செ.மீ வட்டம் கொண்ட 7 அப் பாட்டிலை 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அகற்றினர். கண்ணாடி பாட்டிலால் மாற்றுத்திறனாளியின் மலக்குடல் பகுதி கிழிந்து சேதமடைந்திருந்தது. பாட்டிலை அகற்றியதுடன் கிழிந்த மலக்குடலுக்கு மாற்றாகச் செயற்கையாக மலக்குடல் பகுதி பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளியின் வயிற்றுக்குள் பாட்டில் எப்படி சென்றது என்று மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாற்றுத்திறனாளி தனது ஆசனவாயிலில் அவரே பாட்டிலை சொருகிக் கொண்டதாக சைகையிலேயே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சைகை மூலமாக காட்டியது உண்மையா? அல்லது வேறு ஏதும் காரணமா? எப்படி அவர் வயிற்றுக்குள் பாட்டில் சென்றது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா
வாச்சாத்தி வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!