கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இதில் 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் எனவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் நடந்த விவாதம் ஒன்றில், அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கான காரணங்கள் குறித்து மத்திய அரசு கண்டறிந்துள்ளதா?
கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார். “தற்கொலைக்கான காரணங்கள் வயது, பாலினம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவை பொறுத்து அமைகிறது.
இதுவரை நிகழ்ந்த தற்கொலைகளில் பெரும்பாலும் குடும்ப பிரச்சினைகள், உளவியல் பிரச்சனைகள், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, போதைக்கு அடிமையாதல், தாங்க முடியாத நோய்கள் ஆகியவை என கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக அதாவது 2017-2021ம் ஆண்டு வரை 7,20,611 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என மத்திய அரசு அதிர்ச்சி தகவலை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 2,50,164 பேர் 18 முதல் 29 வயதுடையவர்கள் எனவும் மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டில் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 2017-2021ம் என 5 ஆண்டில் 77,656 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்பது மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் மூலம் தெரியவந்துள்ளது.
கலை.ரா