தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று(மே 6) முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளிலேயே பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுளள்து. மளிகை கடை, ஹார்டுவேர், தேநீர் கடை, என சீல் வைக்கப்பட்ட 3 கடைகள் உள்பட 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாதது, சானிடைசர், வெப்பமானி இல்லாதது போன்ற காரணங்களுக்காக 9 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
முகக்கவசம் அணியாத 48 பேரிடமிருந்து ரூ.200 வீதம் ரூ.9600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதுபோன்று, திருவள்ளூர் கொரோனா திட்ட அதிகாரி ஜோதி தலைமையிலான நகராட்சி வருவாய் அதிகாரி, துணை சுகாதார அதிகாரி இன்று மதியம் திருவள்ளூர் பஜார் மற்றும் காய்கறிச் சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 12 மணிக்கு மேல் திறந்து இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வழக்கம் போல் அனைத்து கடைகளும் செயல்பட்டன. அதுமட்டுமில்லாமல், மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
**-வினிதா**
�,