|நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் வெங்காய விலை!

Published On:

| By Balaji

வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் விலையைக் குறைப்பதற்காக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கத்தைக் கண்டு வந்தது. ஆனால், கடந்த இரு தினங்களாக வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 ஆக உள்ளது. பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியைப் பொறுத்தவரை சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மாநிலத்தின் பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மதுரை மற்றும் திண்டுக்கல் காய்கறி சந்தைகளிலும் இதே விலைக்கு வெங்காயம் விற்பனை ஆகின்றன. மொத்த விற்பனையாக 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையிலும், சில்லறை விற்பனையாக 130 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

கடும் விலை உயர்வால் மக்கள் வெங்காயம் வாங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்து வருவதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று வெங்காயத்தை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல்களில் வெங்காயம் பயன்படுத்துவது குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றான வெங்காய விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விலையைக் கேட்டாலே கண்களில் தண்ணீர் வருவதாகக் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அனைத்து நியாய விலை கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது. வெங்காயத்தின் அவசிய தேவையை உணர்ந்து விலையைக் கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share