இந்தியாவில் 6G சேவையை அறிமுகம் செய்வது தொடர்பான ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் கழகத்துடன் (IISc) நோக்கியா (Nokia) இணைந்துள்ளதாக இன்று (பிப்ரவரி 24) தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தற்போது 5ஜி சேவையே பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் பெரு நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற பகுதிகளில் அதனை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இணைய சேவையில் அடுத்த முன்னேற்றமாக 6ஜி சேவையை வழங்க உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சீனா அதில் முன்னோடியாக உள்ள நிலையில், தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் 6G தொழில்நுட்பத்தை உருவாக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பங்கள் மற்றும் 6ஜி பயன்பாட்டு ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) ஈடுபட்டு வருகிறது. அத்துடன் நோக்கியாவும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இதுதொடர்பாக நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோக்கியா மற்றும் IISc ஆகியவை பெங்களூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நோக்கியாவின் 6G ஆய்வகத்தில் ஒன்றாக ஆராய்ச்சியில் ஈடுபடும்.
‘பாரத் 6G விஷன்’ என்ற பெயரில் நடைபெறும் ஆராய்ச்சியில் 6G ரேடியோ தொழில்நுட்பங்கள், 6G கட்டமைப்பு மற்றும் 6G ஏர் இண்டர்பேஸ் என்ற மூன்று பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியாவின் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அதிகாரி நிஷாந்த் பத்ரா கூறுகையில், “உலகளாவிய தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. இந்தியப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் 6G சேவையை உறுதிசெய்ய, இந்திய அறிவியல் மற்றும் கல்வித்துறையில் திறந்த மனதுடன் பணியாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
மேலும் இந்தியாவிற்கான குறிப்பிட்ட 6G பயன்பாட்டு நிகழ்வுகளை ஆராய்வதன் மூலம், 6G துணைக்கண்டத்தின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதை உறுதி செய்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற உள்ள ஆராய்ச்சிக்கு பின்னர் இந்தியாவில் 6ஜி சேவையானது வரும் 2030ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா