கடலூரில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான இளையராஜா. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜனின் மூன்றாவது மகனான இவர் திமுக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தில் மாவட்ட பொருளாளராக இருக்கிறார்.
விருத்தாச்சலத்தில் வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் இளையராஜா தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை விவசாயமும் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இளையராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று (செப்டம்பர் 8) வழக்கம் போல வயலுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு தயாராகியுள்ளார். அப்போது ராஜசேகரின் மகன்கள் ஆடலரசன், புகழேந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் இளையராஜாவை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த இளையராஜாவை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடலரசன், புகழேந்தி உட்பட 6 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோனிஷா
விஜயலட்சுமி புகார்: ’நாம் தமிழர்’ சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!
