500 கோடி கடன் தந்த சீரடி அறக்கட்டளை!

Published On:

| By Balaji

சீரடி சாய்பாபா அறக்கட்டளை மகாராஷ்டிர அரசுக்கு ஐந்நூறு கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்க உள்ளது என அந்த கோயிலின் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கோதாவரி ஆற்றில் இருந்து அகமதுநகர் மாவட்டத்துக்குக் கால்வாய் வெட்டி நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஐந்நூறு கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்க சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

வடக்கு மராட்டியம் மற்றும் மரத்வாடா பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் வரை, தண்ணீருக்காக கிராம மக்கள் நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மரத்வாடா பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது அத்துடன் மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது என்று அம்மாநில அரசே தெரிவித்துள்ளது.

கோதாவரி ஆற்றில் இருந்து மரத்வாடா பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவினாலும், நிதிபற்றாக்குறையின் காரணமாக அத்திட்டத்தை கிடப்பில் போட்டது அரசு.

ADVERTISEMENT

தற்போது விவசாயிகள் பயன் பெறும் வகையிலான இத்திட்டத்தை முன்னெடுக்க நிதிஉதவி வழங்க சீரடி அறக்கட்டளை முன்வந்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாயை மராட்டிய அரசுக்கு வட்டியில்லா கடனாக வழங்க முன்வந்துள்ளது.

அறக்கட்டளைத் தலைவரான பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் ஹவாரே இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதுடன் இரண்டு தவணைகளாக இந்தத் தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share