ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட 50 நாட்களேயான குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 50 days old Child dies after vaccinated at PHC
கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரன். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனபாக்கியம். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று கே.கே. புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் தடுப்பூசி செலுத்தியதோடு மருந்துகளும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் ஐஸ் கட்டி ஒத்தடம் வைக்க அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் குழந்தைக்கு ஊசி போட்ட தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்த குழந்தைக்கு இன்று காலை மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் குழந்தையை மேற்சிகிச்சைக்காக அவசர ஊர்தியில் வைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து குழந்தையின் தாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவல் துறையினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய விசாரணை நடத்தி செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் எந்த ஒரு குழந்தையும் தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழக்கக் கூடாது” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இன்று காலையிலேயே புகார் அளிக்கப்பட்டும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை அமைதி காப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
