கீழக்கரை அருகே ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐந்து ஐயப்ப பக்தர்கள் வந்தனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று (டிசம்பர் 6) அதிகாலை 3 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே காரை நிறுத்தி விட்டு காரில் தூங்கி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கீழக்கரையை சேர்ந்த கார் ஒன்று ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி 7பேருடன் வந்தது. இந்த கார் நின்று கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த காரின் பின்புறம் வேகமாக மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோதிய காரில் இருந்த ஓட்டுநர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேரும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் விபத்தில் உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
