கோவை கார் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி மாவட்ட நீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம் அருகே கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் கார் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்த விசாரணையில், காரில் இருந்த 2 சமையல் சிலிண்டரில் ஒன்று வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதும், காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையை முடுக்கினர்.

5 பேர் கைது!
முபின் வீடு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில், 22-ம்தேதி இரவு 11.25 மணிக்கு முபின் வீட்டில் இருந்து 5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது.
அதன் அடிப்படையில், 24ம் தேதி இரவில் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27),
பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன்,
”கைது செய்யப்பட்ட 5 பேர் மீது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா) உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

3 நாள் போலீஸ் காவல்!
இதனை தொடர்ந்து மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரிடமும் அடுத்த கட்ட விசாரிப்பதற்காக கோவை மாவட்ட நீதிமன்றத்திடம் போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி இன்று மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராஜ சேகர், கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் வரும் நாட்களில் கோவை கார் விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வரும் என்று நம்பப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தேவர் தங்கக் கவசம்: பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு!
T20 WorldCup 2022: மூன்று மாதத்தில் 26 இடங்கள் முன்னேறிய விராட் கோலி!