கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கும் இடையே வங்கக்கடலில் 5.1ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5.1 earthquake at bay of bengal
இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கும் இடையே வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்காள விரிகுடாவில், 19.52°N அட்சரேகை மற்றும் 88.55°E தீர்க்கரேகையில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது வரை எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே போன்று நேற்று நள்ளிரவு 12.23 மணியளவில் மணிப்பூரின் உக்ருல் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.