ஆன்மீக நகரான உ.பி.யின் வாரணாசி-காசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பை கொண்டாடும் வகையில் மத்திய அரசால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு காசி தமிழ் சங்கமம் 4.0 இன்று டிசம்பர் 2-ந் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்’ என்பதாகும். இதன் மூலம் வெளி மாநில மாணவ, மாணவியர் தமிழ் கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
முதல் கட்டமாக இன்று முதல் டிசம்பர் 15 வரை தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தந்து காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்ள இருக்கின்றன.
மேலும் “தமிழ் கற்கலாம்” முயற்சியின் கீழ் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிமுகம் செய்யவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு வரவுள்ளனர்
2-வது கட்டமாக, தமிழ்நாட்டில் டிசம்பர் 15 முதல் 31 வரை நடைபெறும் நிகழ்ச்சியின்போது வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்குப் வருகை தந்து தமிழ் பண்பாடு, கலாச்சாரம், நாகரீக தொடர்பு போன்றவற்றை தெரிந்து கொள்வதுடன் தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றனர்.
