சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ” தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டது. ஆனாலும், அந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் சுங்க கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 8) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமாக இல்லை என்று கூறிய நீதிபதிகள், சாதாரண மக்களும் எளிதில் அணுகும் முறையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.
சுங்கக் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என கூறினர்.
**வினிதா**
�,