ஆடி அமாவாசையை ஒட்டி பல்வேறு ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 425 special buses for Melmalaiyanur Aadi Amavasai
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அமாவாசை திருவிழா வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள், வள்ளலார் மடம், தற்காலிக பேருந்து நிலையங்கள், திருக்கோவில் வளாகம் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழித்தடங்களில் கூடுதலாக மின் விளக்கு வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு விழுப்புரத்தை ஒட்டியுள்ள சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, ஆரணி, ஆற்காடு ஆகிய வழித்தடங்களில் இருந்து மொத்தம் 425 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
மேலும் பொதுமக்கள் வரும் 24ஆம் தேதி இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
